Monday, August 23, 2010

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் என்று குறளிலும், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பிற்காலத்திலும், விவசாயம் முதன்மைப் படுத்திப் பாடப் பட்டுள்ளது. ஆனால் விவசாயம், விவசாயி என்ற வார்த்தைகளும் அந்த வார்த்தைகளின்  தாக்கங்களும், நவீன காலச் சமூகத்து மக்களிடம் எந்த விதமான உணர்வினையும் ஏற்ப்படுத்துவது இல்லை. இயற்கை விவசாயமும் அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளும் முழுமையாகப் புறக்கணிக்கப் படுகிறது. குறிப்பிட்டுச் சொல்லும் படியான நீர்ப் பாசனத் திட்டங்கள் பெயரளவுச் சுதந்திரத்திற்குப் பிறகு  ஒன்றும் இல்லை.

பெரும்முதலீட்டுத் தொழில்கள் மற்றும் அயல் நாட்டுத் தொழில் நிறுவனங்கள் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று சொல்லி அதிகமான சலுகைகளை அரசிடம் பெற்றுக் கொள்கின்றனர். தங்களிடம் பணி புரிபவர்களுக்கு ஒரு வித உரிமையும் கொடுக்காமல் மிகுந்த மன நெருக்கடிக்குள் வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் விவசாயம் விவசாயி மற்றும் பிற தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் யாருக்கும் அனுகூலமில்லாத ஒரு காலமாக தற்போதைய ஓருலக வணிகக் கொள்கையானது மாற்றம் பெற்றுள்ளது.

எனவே அரசும் மக்களும் மிகவும் கவனமாகச் சிந்தித்து செயல் பட வேண்டும். நமக்கு மிகவும் அவசியமான உணவுப் பொருட்கள் உற்பத்தி தடையின்றி நடைபெறும் வகையில் நீராதாரம் மற்றும் மின்சார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில் துறையில், தரமான அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வியை, ஆர்வமுள்ள யாவரும் முறையாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஆவன செய்ய வேண்டும். அதன் மூலம் நம்முடையவர்களே சுயமாக தொழில் நிறுவனங்களை நிறுவி, மெய்யான மற்றும் நிலையான தொழில் வளர்ச்சி நாட்டில் ஏற்ப்படும்.

அந்நிய விவசாய மற்றும் தொழில் நிறுவனங்கள் நமது சுயச்சார்பை அனைத்து விதத்திலும் இல்லாது செய்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகக் கருதி விரைந்து செயல்பட்டு வென்று முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment