Saturday, June 18, 2011

லோக்பால்

ஊழல் தடுப்பு அமைப்பு சட்ட வரைவு மற்றும் அதன் அதிகார எல்லை குறித்த சமூக ஆர்வலர்கள் மக்கள் பிரதிநிதிகள் இடையிலான கலந்தாய்வு கூடுகைகள் மூன்று முறை நடந்து முடிந்திருகிறது.

ஊழல் ஒழிக்கப் பட வேண்டும் என்று அனைவரும் மிக அழகாக உரையாற்றுகிறார்கள்.

ஆனால்

ஊழல் செழித்து வறட்சி நிவாரணம் முதல் வெள்ள நிவாரணம் வழியாக சுனாமி நிவாரணம் வரையில் வளர்கிறது.

ஊழல் பீரங்கியில் துவங்கி சவப்பெட்டியில் ஊர்வலம் வந்து ஆதர்சுவில் நின்று சிரிக்கிறது.

ஊழல் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மதங்களின் பெயரால் எளிய மக்களை மோதவிட்டு பின்னால் நின்று ரத்தம் குடிக்கிறது.

ஊழல் இறையாண்மை என்ற ஒரு போர்வைக்குள் மறைந்து கொண்டு தன்னிலும் வேறுபட்ட தனக்கு சவால் விடக்கூடிய இனங்களை தந்திரமாக மொழி, பண்பாடு மற்றும் நாகரிக படையெடுப்பின் மூலம் சிதைக்கிறது.

ஊழல் எளிய மக்களின் வாழ்வாதாரங்களை தொழில் மயம்,  தொழில் வளர்ச்சி மற்றும் தொழில் புரட்சி என்ற பெயர்களில் ஒழித்து விட்டு, சுயமாக சொந்த வளங்களைக் கொண்டு சொந்த இடங்களில் உழைத்து சுயமரியாதையோடு வாழ்ந்த மக்களை தினக்கூலிகள் ஆக்குகிறது.

ஊழல் மனிதர்களையும் பொருட்களைப் போல வியாபாரப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் சந்தைப் படுத்தி ஆண்களையும் பெண்களையும் அவர்கள் விழிப்படைந்து உணர்வதற்குள் சுய ஆளுமையை சேதப்படுத்தி விடுகிறது.
இன்னும் ஏராளமான தீமைகளை அது தந்திரங்கள் சலுகைகள் வழியாக மக்களுக்குள் ஊடுறுவி செயல்படுத்துகிறது.

இவை எல்லாம் என்று மாறும் என ஒருவரைப் பார்த்து  ஒருவர் பேசிக்கொண்டே விட்டுவிடாமல் துணைக்கண்டத்தின் ஒவ்வொரு தேசிய இனத்தின் எல்லா மக்களும் முயன்று ஊழல் தடுப்ப்பு மக்கள் நீதிமன்ற அமைப்பை ஏற்படுத்த பங்கள்ளிபைச் செய்யவேண்டும்.  
  

Thursday, September 16, 2010

காசுமீரில் இந்தியாவின் நிறமும் கரமும்

காசுமீர் நாட்டு மக்கள் தெருவுக்கு வந்து கல்லால் அடித்து ராணுவத்தை விரட்டுகிறார்கள்.  ஏன்? எதற்கு? எப்படி?


பாக்கிசுதானின் நேரடி ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிக்கொள்ள தேடிய வழி துணைக்கண்டத்தின் வஞ்சக ஆக்கிரமிப்பில் வந்து முடிந்தது. சரி எப்படி ஆனாலும் நிம்மதியாக இருந்தால் போதும் என்று மக்கள் நினைத்தார்கள்.


ஆனால் அரசியலை பிழைப்பாக கொண்ட சுயநல அரசியல்வியாதிகளும், இனம் மதம் மொழி நாகரீகம் பண்பாடு மற்றும் பொருளாதார ஆக்கிரமிப்பிற்கு அரசியலை ஒரு கருவியாக தெரிந்து கொண்ட திருடர்களும், காசுமீர் நாட்டு மக்களை பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு முடக்கியிருந்தார்கள்.


இப்போது மக்கள் விழித்துக் கொண்டார்கள், சுயநலவாதிகளும், அரசியல் திருடர்களும் தப்ப வழியின்றி, எதைத் தின்றால் பித்தம் தெளியும், என்ற நிலையில் வெட்கிப்போய் உள்ளார்கள்.


ஒரு முதல்வர் கேட்கிறார் காசுமீர் வன்முறைக்கு என்ன நிறம் என்று.  காசுமீர் வன்முறையின் நிறம் இந்தியாவின் நிறம் இரண்டும் ஒன்றுதான்.  காசுமீரில் ராணுவமும் தீவிரவாதிகளும் செய்ததுதான்  வன்முறை.  ஆனால் மக்கள் செய்வதற்குப் பெயர் புரட்சி.  அதற்கு நிறம் இல்லை, அது தூய்மையானது நிர்மலமானது. திட்டமிட்டு  கலவரத்தையும் மதவெறியையும் தூண்டிவிடுபவர்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்.


அமெரிக்க ஐக்ய மாநிலங்களின் தலைவர் திரு ஒபாமா சொல்வது போல் நாம் நினைத்த இடத்தில் ஒரு கிறித்தவ ஆலயத்தை கட்டுகிறோம் ஒரு யூத வழிபாட்டுத் தலத்தை நிர்மாணிக்கிறோம்.  அதைப்போல் ஏன் ஒரு மசூதியை விரும்பிய இடத்தில் நிறுவமுடியாது?  அப்படிச் செய்ய முடிவதுதான் நமது மக்களாட்சியின் பெருமையாக இருக்க முடியும் அதில்தான் அமெரிக்காவின் பெருந்தன்மையும் பலமும் நம்பிக்கையும் அடங்கியிருகிறது.

காசுமீரம் இந்தியாவின் மணிமகுடமாக இருந்தது. ஆனால் சுயநலவாதிகளுக்கும், திருட்டு அரசியல்வாதிகளுக்கும், அதன் மதிப்பும் பெருமையும் பலமும், தெரியவும் இல்லை புரியவும் இல்லை.

இப்போதும் அமெரிக்க ஐக்ய மாநிலங்கள் போல் துணைக்கண்டத்தின் அனைத்து நாட்டு / மாநில / இன மக்களுக்கும் சுயாட்சி / விடுதலை விருப்பம் புரிந்துணர்வு மற்றும் மரியாதை அங்கீகாரம் போன்ற நல்ல அளவு நிலைகளை அடிப்படையாகக் கொண்டு இணைந்திருந்தால் இந்தியா என்ற அமைப்பு பலமாகவும் வளமாகவும் இருக்கும்.


அப்படியில்லாமல் ஆக்கிரமிப்பிற்கும் சுரண்டலுக்கும் மட்டும் தேவையானதும் பயன்படுவதுமான தற்போதைய அமைப்பைப் பாதுகாத்தால் போதும் என்று நினைத்தால் நிலைமையை மக்கள் மாற்றும் காலம் விரைவில் வரும்.

Wednesday, September 1, 2010

கள்ளுண்ணாமை

௧.  மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

௨.  மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

௩.  கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

௪.  மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

௫.  ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

௬.  மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

நன்றி கலைஞரின் குறளோவியம்

மேலே வள்ளுவரின் வலிமையான திருக்குறளுக்கு கலைஞரின் வளமான தெளிவுரையைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

மிகவும் அழகாக கலைஞர் உரை விளக்குகிறது குடிப்பவ(ர்/ரை)

தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்.

அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது.

கலைஞர் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் மக்களுக்கு பயன் கொடுக்கிறது.  ஆனால் இந்த டாஸ்மாக் அவை எல்லாவற்றின் பயனையும் ஒன்றும் இல்லாமல் வீணாக்கி விடுகிறது.

எனவே மதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினால் அது தமிழருக்கு நன்மையாகவும் கலைஞருக்குப் பெருமையாகவும் இருக்கும்.

எதிர்பார்ப்புடன் தமிழன் யோவான்.

Monday, August 23, 2010

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் என்று குறளிலும், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பிற்காலத்திலும், விவசாயம் முதன்மைப் படுத்திப் பாடப் பட்டுள்ளது. ஆனால் விவசாயம், விவசாயி என்ற வார்த்தைகளும் அந்த வார்த்தைகளின்  தாக்கங்களும், நவீன காலச் சமூகத்து மக்களிடம் எந்த விதமான உணர்வினையும் ஏற்ப்படுத்துவது இல்லை. இயற்கை விவசாயமும் அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளும் முழுமையாகப் புறக்கணிக்கப் படுகிறது. குறிப்பிட்டுச் சொல்லும் படியான நீர்ப் பாசனத் திட்டங்கள் பெயரளவுச் சுதந்திரத்திற்குப் பிறகு  ஒன்றும் இல்லை.

பெரும்முதலீட்டுத் தொழில்கள் மற்றும் அயல் நாட்டுத் தொழில் நிறுவனங்கள் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று சொல்லி அதிகமான சலுகைகளை அரசிடம் பெற்றுக் கொள்கின்றனர். தங்களிடம் பணி புரிபவர்களுக்கு ஒரு வித உரிமையும் கொடுக்காமல் மிகுந்த மன நெருக்கடிக்குள் வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் விவசாயம் விவசாயி மற்றும் பிற தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் யாருக்கும் அனுகூலமில்லாத ஒரு காலமாக தற்போதைய ஓருலக வணிகக் கொள்கையானது மாற்றம் பெற்றுள்ளது.

எனவே அரசும் மக்களும் மிகவும் கவனமாகச் சிந்தித்து செயல் பட வேண்டும். நமக்கு மிகவும் அவசியமான உணவுப் பொருட்கள் உற்பத்தி தடையின்றி நடைபெறும் வகையில் நீராதாரம் மற்றும் மின்சார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில் துறையில், தரமான அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வியை, ஆர்வமுள்ள யாவரும் முறையாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஆவன செய்ய வேண்டும். அதன் மூலம் நம்முடையவர்களே சுயமாக தொழில் நிறுவனங்களை நிறுவி, மெய்யான மற்றும் நிலையான தொழில் வளர்ச்சி நாட்டில் ஏற்ப்படும்.

அந்நிய விவசாய மற்றும் தொழில் நிறுவனங்கள் நமது சுயச்சார்பை அனைத்து விதத்திலும் இல்லாது செய்து விடும். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகக் கருதி விரைந்து செயல்பட்டு வென்று முடிக்க வேண்டும்.

Saturday, August 21, 2010

ஒதுக்கீடா அல்லது பங்கீடா

மாநிலங்கள் மற்றும் மாநிலங்களின் ஒன்றியம், ஆகிய இரண்டு நிர்வாகங்களின் நிறுவனங்கள் மற்றும் துறைகளில், உள்ள அனைத்து விதமான வாய்ப்புக்களையும், சமூக நீதி அடிப்படையில் நியாயமாகப் பிரித்து அளிக்கும் போது, அதை ஒதுக்கீடு என்று சொல்லாமல் பங்கீடு என்று சொன்னால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் இன்னும் தெளிவும் வலுவும் கிடைக்கும். நன்றி.

Friday, August 20, 2010

நன்றி நன்றி

மருத்துவக்  கல்லுரி மாணவர் சேர்க்கைக்கு துணைக்கண்டம் முழுமைக்கும் பொது நுழைவுத் தேர்வு என்ற மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) (Indian Union) முன் வைக்கும் திட்டத்திற்கு தமிழ் நாட்டின் முதல் நிலைக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது தமிழ் நாட்டு மக்களின் மனமுவந்த வரவேற்பைப் பெரும். இது போல இலங்கை, காவிரி, முல்லைப்பெரியாறு மேலும் ஒன்றியத்தின் பிற திட்டங்களில் எல்லாம் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நின்றால் மக்களின் நெஞ்சார்ந்த நன்றிக்கு உரியவர்களாய் இருப்பார்கள்.

Tuesday, August 17, 2010

உளுந்த வடை

என் மகள் இரண்டு வயதில் அருகில் உள்ள கடைக்கு கூட்டிச் சென்று உளுந்து வடை வாங்கிக் கொடுத்தேன். இது என்ன என்று கேட்டாள். நான் உளுந்த வடை என்று பதில் சொன்னேன். அவள் உடனடியாக கீழே உளுந்த வடையா என்று கேட்டாள். நான் திடுக்கிட்டு இல்லை அம்மா அது உளுந்து மாவில் செய்த வடை என்று சொன்னேன். இப்போதும் அவளிடம் வடை கொடுக்கும் போது சிரித்துக் கொண்டே கீழே விழாத வடை என்று சொல்லுவேன்.